img 20260128 wa0000

நமது ஆலயத்தை கட்ட முடியாத படி ஏற்படும் ஐந்து தடைகள் | Tamil Bible Latest Message| Bible Sermon

நல்ல ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக.



சின்னாபின்னமாக இருந்த ஆலயத்தை மறுபடியும் மீள கட்டுவதற்காக பெர்சியா ராஜாவாகிய கோரேஸ் அனுமதி கொடுக்கின்றதோடு அதற்கேற்ற அத்தனை ஒழுங்குகளையும் அவர் செய்கின்றார். எருசலேமின் ஆலயம் இடிக்கப்பட்டிருக்கின்றது; அங்கிருந்த மக்கள் சிறைபிடிக்கப்பட்டு அடிமையாக பாபிலோனில் இருக்கின்றார்கள். சுமார் 70 ஆண்டுகளுக்கு பிற்பாடு மீளவும் தங்களுடைய தேசத்துக்குள் குடியேறி ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான அருமையான சந்தர்ப்பங்கள் இங்கே கைகூடி வருகின்றது. அவ்வேளையில் ஆலயத்தை கட்டி முடிப்பதற்குள் தடையாக எழுந்த பிரச்சனைகளை இன்றைய நாளிலே நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.

br>

நாமே இன்றைய நாளில் தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம். நம்முடைய ஆலயத்தை நாம் சிறப்பாக கட்டி எழுப்ப வேண்டிய மிகப் பெரிதான கடமை நமக்கு இருக்கின்றது. நாம் ஆலயத்தை கட்டுகின்ற பொழுது நம்முடைய வாழ்விலும் இது போன்ற பல தடைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி வரலாம். அவ்வாறு தடைகளை நாம் சந்தித்தாலும் அவைகளை மேற்கொண்டு தேவன் விரும்புகிற ஆலயமாக நம்முடைய ஆலயத்தை கட்டும் போது அங்கே தேவனுடைய மகிமையும் தேவனுடைய பிரசன்னமும் விளங்கும்.

br>

முதலாவதாக எஸ்றா 4:1,2 வசனங்களை நாம் வாசிப்போம். சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த சத்துருக்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் செருபாபேலிடத்துக்கும் தலைவரான பிதாக்களிடத்துக்கும் வந்து: உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இவ்விடத்துக்கு எங்களை வரப்பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோம் என்று அவர்களோடே சொன்னார்கள்.

br>

யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த சத்துருக்கள் இவர்கள் ஆலயம் கட்டுகிற செய்தியை கேள்விப்பட்டவுடன் அவர்களும் உடனடியாக எருசலேமுக்குள் வந்து நாங்களும் உங்களுடன் சேர்ந்து கட்டுவோம் உங்களைப் போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம் என்பதாக கூறி இவர்களுடன் சேர்ந்து ஆலயத்தை கட்டுவதற்காக எதிரிகளாகிய இவர்களும் கரங்களை கோர்க்கிறார்கள்.

br>

உண்மையில் அங்கிருந்த தலைவர்கள் அந்த வேளையில் அவர்கள் கொடுத்த பதில் அதிசயமானது. அவர்கள் சொல்லுகிறார்கள் எங்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை, எங்கள் தேவனுடைய ஆலயத்தை நாங்களே கட்டுவோம், உங்களுடைய உதவி எங்களுக்கு தேவையில்லை என்பதாக அவர்களுக்கு சொல்லி அனுப்புவதை நாம் கீழ்கண்ட வசனங்களை வாசிக்கிற போது கண்டு கொள்ள முடியும்.

br>

உண்மையில் எதிரிகளுடன் இணைந்து ஆலயத்தை கட்டுவதென்பது அது நல்ல ஒரு உகந்த சூழ்நிலையாக இருக்காது. அவர்கள் நிச்சயமாக ஆலயத்தை கட்ட விரும்ப மாட்டார்கள். எதிரிகள் இந்த திட்டங்களை குழப்பும்படியாகவே உள்ளத்துக்குள் காரியத்தை மறைத்து வைத்துக்கொண்டு இப்பொழுது இவர்களுடன் இணைந்து செயல்படுவதாக பொய் கூறி ஏமாற்ற முயற்சித்தனர்.

br>

ஆனாலும் அன்றைய தலைவர்கள் இவர்களுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை, இவர்கள் உண்மையிலேயே சத்துருக்கள், இவர்கள் யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த எதிரிகள்; இவர்கள் ஒருபோதும் அவர்கள் ஆலயத்தை கட்ட விரும்பவே மாட்டார்கள், ஆயினும் இந்த காரியத்திலே வெற்றியை பெற்றுக் கொள்ளத்தக்கதான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டது. அன்பானவர்களே! நம்முடைய வாழ்க்கையில் நாம் ஆலயத்தை கட்டுவதற்கு நம்முடைய எதிரிகளுடன் இணைந்து கட்ட முடியாது. நாம் நம்முடைய எதிரிகளை இனம் காண வேண்டும். நம்முடைய சத்துருக்கள் பிசாசு, மாம்சம், உலகம். ஆகவே புதிய ஏற்பாட்டு காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிற நம்முடைய வாழ்க்கையிலே நாமே ஆலயங்களாய் இருக்கிறோம்; நம்முடைய எதிரிகளான இதனை நாம் நன்றாக அடையாளம் கண்டு இவர்களுக்கும் எங்களுக்கும் எது வித சம்பந்தமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொண்டு தேவனுடைய ஆலயத்தை கட்ட நாம் பிரயாசப்பட வேண்டும்.

br>

முதலாவதாக உலகம்

இந்த உலகத்திலே நாம் வாழ்ந்தாலும் உலகத்துக்கும் நமக்கும் எதுவித சம்பந்தமும் இருக்கக் கூடாது. அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு மிகவும் தெளிவாக சொல்லுகின்றார்; உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள் என்பதாக. நாம் உலகத்தில் அன்பு கூர்ந்தால் தேவனுடைய ஆலயத்தை கட்ட முடியாது.

br>

உலகமானது பணம், பொருள், சொத்துக்கள் என பலவற்றை கொண்டிருக்கின்றது. இந்த காரியங்களை நாம் வாஞ்சித்து இவற்றை அடையும் ஆவலுடன் இருந்து கொண்டு நம்முடைய வாழ்க்கையில் ஆலயத்தை கட்ட முடியாது. இவைகளை நாம் புறம்பே தள்ள வேண்டும்.

br>

நாம் உணவுக்காக கவலைப்பட தேவையில்லை. நம்முடைய ஆண்டவர் நம்மை போஷித்து நடத்த வல்லமை உள்ள தேவனாக இருக்கின்றார். ஒன்றையும் குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. உலகம் அநேக காரியங்களை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. உலகத்தில் நாம் ஒன்றும் கொண்டு வந்ததும் இல்லை ஒன்றும் கொண்டு போகப் போவதுமில்லை. நான் வெறும் கையுடனேயே வந்தோம்; வெறும் கையாகவே போகப் போகிறோம்.

br>

ஆகவே இந்த உலகத்தின் காரியங்களுக்கு அடிமைப்பட்டு, ஆசைப்பட்டு அவைகளை தேடி, அவைகளை மனதார நாடி நாம் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குள் நுழைய முடியாது. முதலாவது தேவனையும் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குரியவைகளையும் நாம் தேட வேண்டும் . இன்றைக்கு நம்மில் அநேகர் ஜெபம் பண்ணாமல், வேதம் வாசிக்காமல், கர்த்தருடைய நற்கிரியைகளில் பங்கெடுக்காமல், கர்த்தருடைய ஆலயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உலகத்து காரியங்களை நாடி தேடுகிறோம். நாம் ஒரு நாளில் அதிக நேரத்தை உலகத்திலேயே செலவழிக்கிறோம். ஆகவே உலகமான இந்த எதிரியை நாம் எதிர்த்து நமக்கும் அதற்கும் எதுவித சம்பந்தமும் இல்லாதபடியே நடப்பவர்களாக இருக்க வேண்டும்.

br>

இரண்டாவதாக மாம்சம்.

அதாவது மாம்சத்தின் கிரியைகள் பல இருக்கின்றன. அவைகளின் படி நாம் நடந்து கொண்டு நம்முடைய ஆலயத்தை கட்டி நாம் பிரதிஷ்டை செய்ய முடியாது. மாம்சத்தின் கிரியைகள் என்று சொல்லும் போது, புதிய ஏற்பாட்டிலே ஒவ்வொரு புத்தகங்களிலும் பல்வேறு விதமான மாம்சத்தின் கிரியைகள் குறிப்பிடுகிறது.

br>

ரோமர், கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர் கொலொசேயர் என ஒவ்வொரு புத்தகத்திலும் மாம்சத்தின் கிரியைகள் பல இருக்கின்றது. விபச்சாரம், வேசித்தனம், களவு, பொய், சண்டைகள், தூசனங்கள், வாக்குவாதங்கள், பொறாமைகள், களியாட்டங்கள், பொய்கள், பரிகாசம் செய்தல், கெட்ட வார்த்தை பேசுதல், கசப்புகள், புறங்கூறுதல்கள் என பலவிதமான மாம்சத்தின் கிரியைகள் இருக்கின்றன.

br>

இவைகள் நம்முடைய எதிரிகள். இந்த எதிரிகளோடு இணைந்து நாம் ஆலயத்தை கட்டுவது என்பது நிச்சயமாகவே சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும். ஆகவே எங்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வது போல நாமும் அவ்வாறே சொல்லி நம்முடைய ஆலயத்தை நாம் கட்டி தடை இல்லாத படி வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

br>

மூன்றாவதாக பிசாசு

இந்த பிசாசு நம்முடைய எதிரி. இவன் ஆலயத்தை கட்ட ஒரு போதும் விரும்ப மாட்டான். பிசாசின் கிரியைகளை நாம் முதலில் தள்ளிவிட்டு நாம் அதை எதிர்த்து நின்று தேவனுடைய ஆலயத்தை கட்டுவதற்கு வாஞ்சை யாக இருக்க வேண்டும். ஆகவே இந்த உலகம், மாமிசம், பிசாசு ஆகியவைகளே நம்முடைய எதிரிகள். நம்முடைய ஆலயத்தை நாம் கட்டி, அங்கே தேவனுடைய மகிமை விளங்க ஆவலாய் இருப்போம்; இந்த எதிரிகளுடன் துணை நிற்பதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

br>

இரண்டாவதாக எஸ்றா 4:4 – அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி,

br>

இங்கே ஆலய பணிகளை செய்பவர்களின் கைகளை தளர பண்ணினார்கள். தளர பண்ணுவது என்றால் சோர்ந்து போக செய்தல், அதைரியப்படுத்துதல் என அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும். அவர்கள் இவர்களுடன் சேர்ந்து ஆலயத்தை கட்ட வந்தனர் ஆனால் யூதாவின் தலைவர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை, அவர்கள் நல்ல மனிதர்கள் என்றால் அவர்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பி போய் இருக்கலாம்.

br>

ஆனால் அவர்கள் அங்கேயே நின்று அந்த ஆலயத்தை கட்டுகிறவர்களின் கைகளை தளர பண்ணினார்கள். அவர்கள் ஏதாவது ஒரு கதையை சொல்லி இருக்கலாம் அல்லது அவர்களுடைய மனது கஷ்டப்படுகிற மாதிரியான காரியங்களை பேசி இருக்கலாம்.

br>

உங்களுடைய வாழ்க்கையிலும் சிலர் உங்களது நோக்கங்களை மறந்து போகச் செய்து திசை திருப்பும் வண்ணமாக பேசியிருக்கலாம். தலைவர்களிடையே ஒருவருக்கொருவர் பகைமைகளை வளர்த்துக் கொள்ளுகிற வண்ணமாக பேசியிருக்கலாம். ஏதோ ஒரு காரியத்தை சொல்லி அவர்களுடைய கைகளை தளர பண்ணினார்கள் என்பது நிச்சயமான ஒரு விஷயம்.

br>

அன்புக்குரியவர்களே! நம்முடைய வாழ்விலும் இன்று நாம் ஆலயத்தை கட்ட முடியாதபடி நம்முடைய வாழ்க்கையை தளர பண்ணுகின்ற பேச்சுகளுக்கு, செயல்களுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?, இப்படி ஆலயத்தின் காரியங்களை செய்து கொண்டு இருந்தால் உங்களுடைய எதிர்காலம் என்னதாக மாறும்?, நீங்களும் உங்களுடைய சந்ததிகளும் எதிர்காலத்தில் எப்படி இருக்க போகின்றீர்கள்?, வேலை இல்லாமல்,உணவில்லாமல், உங்களுக்கு என்று காணி வீடுகளை நீங்கள் கொள்வனவு செய்யாமல் இப்படியே ஆலயத்தை கட்டிக்கொண்டு இருந்தால் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

br>

இதுபோன்ற பேச்சுகளினால் அன்றைய நாட்களிலே அவர்களுடைய கைகள் தளர்ந்து போய் இருக்கலாம். அருமையானவர்களே நம்மையும் தளர்ந்து போகச் செய்ய நம்முடைய எதிரிகள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் நாம் அவற்றை புரிந்து கொண்டு நாம் கட்டுகிற ஆலயம் ஜீவனுள்ள தேவனுடைய மாளிகை. ஆண்டவருடைய மகிமை விளங்குகின்ற ஆலயத்தை எப்படியாவது நான் கட்டி முடிப்பேன் என்று நாம் உறுதி பூண்டவர்களாக நமக்கு முன்பாக வருகின்ற தளர்ந்து போகக்கூடிய காரியங்களையும், செயல்களையும், வார்த்தைகளையும் உதறி தள்ளிவிட்டு நாம் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகளாய் பெலப்பட்டவர்களாக, தைரியப்பட்டவர்களாக நம்முடைய ஆலயத்தை கட்டி முடிக்க நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

br>

அதே நேரம் நாம் ஒருவரை ஒருவர் தாங்கி, உற்சாகப்படுத்தி ஒவ்வொருவரும் ஆலயங்களை கட்ட ஊக்கப்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய ஆண்டவர் அவர் நெரிந்த நாணலை முறியாதவரும் மங்கி எரிகிற திரியை அணையாதவரும், தள்ளாடுகிற முழங்கால்களை பலப்படுத்துகிறவரும் தளர்ந்து போன கைகளை திடப்படுத்துகிறவருமாக இருக்கிறார். அதனால் நாம் தளர்ந்து போகக்கூடிய வார்த்தைகள் உதறித் தள்ளிவிட்டு, அது போன்ற எதிரிகளை நம்முடைய வாழ்க்கையில் தூக்கி எறிந்து விட்டு ஆண்டவர் விளங்குகின்ற ஆலயத்தை அவருக்கேற்ற வண்ணமாக கட்டி முடிக்க நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.

br>

மூன்றாவதாக அதே வசனத்தை நாம் திரும்பவுமாக வாசிக்கிற பொழுது, “அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி,

br>

“கட்டாதபடிக்கு அவர்களை சங்கடப்படுத்தி” என்கின்றதான ஒரு வார்த்தையை நாம் வாசிக்கலாம். சங்கடப்படுத்துவது என்பது குழப்பங்களை உண்டு பண்ணுவது அல்லது கலக்கங்களை ஏற்படுத்துகிற செயல்களை செய்வது என அடையாளப்படுத்தலாம். எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக கட்டியவர்களை, அவர்களது இருதயங்களில் குழப்பங்களையும் கலகங்களையும் சங்கடங்களையும் ஏற்படுத்தினவர்களாக இருந்தார்கள்.

br>

ஏதோ பேச்சுக்களினாலோ அல்லது செயல்களினாலோ அவர்களுடைய இருதயங்களிலே பார தூரமான சங்கடங்களை ஏற்படுத்தினார்கள். இதனால் வேலையை செய்ய படு பயங்கரமான ஒரு தடையை அவர்களை ஏற்படுத்தினார்கள். சங்கடங்களை ஏற்படுத்துகிற மனிதர்களை நாம் இனம் கண்டு தள்ளாது போனால், எதிரிகளை இனம் கண்டு அழிக்காது போனால் நம்முடைய வாழ்க்கையில் ஆலயத்தை கட்டுவதற்கு எம்மால் முடியாது ; நீண்ட காலங்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டி வரும்.

br>

இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் கலக்கங்களை குழப்பங்களையும் ஏற்படுத்தி நிம்மதிகளை கெடுக்கிற, சங்கடப்படுத்துகிற காரியங்களை நாம் தூக்கி எறிந்து கொள்ள வேண்டும். எதிரிகளோடு கைகோர்க்காது போனாலும் எதிரிகள் நம்மத்தியில் நின்று பின்னணியிலே செயல்படுகிற செயல்களை நாம் நன்றாக அறிந்து கொண்டு, நாம் ஆலயத்தை கட்டி முடிக்கு மட்டும் உற்சாக மனநிலையோடு செயல்படுவது நமக்கு மிகவும் அவசியமான ஒன்று.

br>

அவர்களுடைய எதிர்காலத்தை குறித்து இவர்கள் குழப்பமடைய செய்திருக்கலாம் அல்லது அவர்களுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையை குறித்து இவர்கள் குழப்பமடைய செய்திருக்கலாம். தங்களுடைய பொருளாதார நிலைமைகளை குறித்து இவர்கள் குழப்பமடைந்து இருக்கலாம். நீங்கள் உங்களுக்கு காணி வாங்க வேண்டும், நீங்கள் உங்களுக்கு வீடு கட்ட வேண்டும், நீங்கள் வயல்களை தயார்படுத்த வேண்டும், நீங்கள் உங்களுக்கு என்று ஒரு தொழிலை ஏற்படுத்த வேண்டும்; அப்படி இல்லாமல் ஆலய வேலைகளை செய்வதினாலே உங்களுடைய நேரங்கள் காலங்கள் போகும்போது எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்பது போன்ற பேச்சுகளை பேசுவதாலே ஒருவேளை அவர்களுடைய இருதயம் குழப்பம் அடைந்து, கலக்கமடைந்து சங்கடத்துக்குள்ளாக சென்று இருக்கலாம். ஆனாலும் அதையும் தாண்டி ஆலயத்தை புணரமைத்து, சீர்படுத்தி மறுபடியும் கட்டி எழுப்புவது மிகவும் அவசியமான ஒன்றாக அமைகிறது.

br>

நான்காவதாக எஸ்றா 4:5 அவர்களுக்கு விரோதமாக ஆலோசனைக்காரருக்கு கைக்கூலி கட்டினார்கள் என்பதாக நாம் வாசிக்கின்றோம். இங்கே ஆலோசனைக்காரராக சிலரை அனுப்புவது அவர்களுடைய திட்டத்தில் ஒன்றாக இருந்தது. ஆனால் அந்த ஆலோசனைக்காரர் இவர்களுடைய திட்டங்களை கவிழ்த்து போடும்படியாய், இவர்களுடைய யோசனைகளை அவத்தமாக்கும்படியாகவே இருந்தது .

br>

கைக்கூலியை வாங்கிக் கொண்டு செயல்பட போகிறார்கள். அவர்கள் கொடுப்பது நல்ல ஆலோசனை போல இருக்கும் ஆனால் அந்த ஆலோசனை ஒன்றுக்கும் உதவாது. அது ஆலயத்தை கட்டுவதற்கு உதவப் போவதில்லை. ஆகவே அவர்களுடைய ஆலோசனையை அவர்கள் கேட்டுவிட்டால் ஒருபோதும் ஆலயத்தை கட்டி முடிக்கவே முடியாது. நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நம்முடைய சரீரமான இந்த ஆலயத்தை அவருக்கேற்ற வண்ணமாக கட்டி எழுப்ப வேண்டுமானால் நம்முடைய வாழ்க்கையில் அவ்வப்போது கிடைக்கிற ஆலோசனைகளை குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.

br>

சில ஆலோசனைகள் நம்முடைய எதிரியாக சாத்தான் நம்மை ஆலயத்தை கட்ட முடியாதபடி அனுப்பப்பட்ட ஆலோசனைகளாக இருக்கலாம். நம்முடைய ஆலோசனைக்காக பலரை பிசாசு பயன்படுத்த முடியும். கொடுக்கிற ஆலோசனைகளை நாம் ஆராய்ந்து பார்த்து நான் தேவனுடைய ஆலயத்தை கட்ட முடியுமா?, நான் இதன் மூலமாக தேவனுக்கு மகிமையை கொண்டு வர முடியுமா?, நான் இதன் மூலமாக தேவனுடைய ஆலயத்தின் பணிகளை பூர்த்தி செய்ய முடியுமா? என்பதாக நாம் நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

br>

கொடுக்கப்படுகிற ஆலோசனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நம்முடைய வாழ்க்கையிலும் நாம் முன்னேறுவதற்காக அதாவது நம்முடைய உலகப் பிரகாரமான காரியங்களில், வீடுகளை வாங்கி, காணிகளை வாங்கி கட்டடங்களை கட்டி இன்னுமாய் நாம் முன்னேறுவதற்காக சில விதமான சில பல ஆலோசனைகளை நாம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த ஆலோசனைகள் நாம் நம்முடைய சரீரமாகிய ஆலயத்தை கிறிஸ்துவின் மகிமை விளங்கக்கூடிய ஆலயமாக கட்டி முடிக்க ஏதுவாக இருக்குமா என்பது குறித்து நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

br>

ஐந்தாவதாக எஸ்றா 4:6 அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள்.

br>

இங்கே கடிதத்தை எழுதி இந்த வேலையை எப்படியாவது தடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற முனைப்போடு மற்றும் ஒரு செயலை இந்த எதிரிகள் செய்வதை நாம் பார்க்கின்றோம். இவர்களுக்கு விரோதமாய் ராஜாவிடம் கடிதங்களை அனுப்பி எப்படியாவது வேலையை தடுத்துக் கொள்ள வேண்டும், நிறுத்த வேண்டும் என்ற முனைப்போடு எதிரிகள் செயல்படுவதை நாம் பார்க்கின்றோம்.

br>

நண்பர்களே நம்முடைய வாழ்விலும் நாம் ஆலயத்தை கட்டும்போது நம்மை விட பெரிய மனிதர்களிடத்திலே, நமக்கு முன்பாக இருக்கின்ற தலைவர்கள் மத்தியிலே நம்மைப் பற்றி தேவையற்ற விஷயங்களை பேசி நம்மைப் பற்றிய எதிர்ப்புணர்வுகளை கொண்டு வந்து எப்படியாவது நாம் கட்டுகிற ஆலயத்தை கட்ட முடியாதபடி தடைகளை ஏற்படுத்தக் கூடியதான காரியங்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

br>

அவர்களுக்கு தேவை நம்முடைய ஆலயம் கட்டுப்படக்கூடாது. என்ன வேண்டுமென்றால் எதை வேண்டுமானாலும் செய்து தடுத்து நிறுத்த துடிக்கும் இந்த உலகத்திலே நாம் விடாது நம்முடைய ஆலயத்தை கட்டி பிரதிஷ்டை பண்ணி தேவனுடைய நாமம், தேவனுடைய மகிமையும் தேவனுடைய பிரசன்னமும் விளங்குகிற இந்த சரீரத்தை ஆலயமாக முடித்து தேவ அன்பை இந்த உலகத்தில் பறைசாற்றுவோம்.

br>

நீங்கள் ஆலயத்தை கட்டி முடித்தால் தேவனுடைய ஆவியானவர் பலமாய் உங்களில் செயற்படுவார். . நீங்கள் போகும் இடமெல்லாம் ஆரோக்கியம். நீங்கள் இருக்கிற இடங்கள், உட்காருகிற இடங்கள், பழகுற மனிதர்கள் எல்லாருமே ஆசீர்வதிக்கப்படுவார்கள். உங்களுடைய ஆலயத்தை பார்ப்பதற்காக ஜனங்கள் ஆச்சரியத்துடன் பிரமை கொண்டு உங்களுடைய ஆலயத்துக்குள் ஓடி வர ஆயத்தமாய் இருப்பார்கள். உங்களோடு பேச, உங்களோட ஐக்கியப்பட, உங்களோடு கலந்து கொள்ள மக்கள் ஆசைப்படுவார்கள்.

br>

நாம் ஆலயத்தை கட்டி முடிக்க வேண்டும். நம்முடைய ஆலயம் கட்டி முடிக்கப்படாவிட்டால் அந்த ஆலயத்திலே நாம் பெரும்பலவான காரியங்களை செய்ய விரும்ப மாட்டோம். சிறப்பான ஒரு ஆலயத்தை கட்டி முடித்தால் அங்கே எல்லா காரியங்களையும் செய்து கொள்ள நாம் விரும்புவோம். நம்முடைய ஆலயத்தை அனேகர் பார்வையிட விரும்புவோம். அது போன்ற காரியங்களை நாம் செய்வோம். நிச்சயமாகவே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!! ஆமென்.

br>

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *